நீர்வீழ்ச்சியில் விழுந்த சட்டையை எடுக்க முயன்றபோது... ஜே.இ.இ. மாணவருக்கு நேர்ந்த சோகம்

ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின்பே தண்ணீரின் ஆழத்தில் பாறைகளில் சிக்கி இருந்த அவரது உடலை மீட்க முடிந்தது.
கோட்டா,
உத்தர பிரதேசத்தின் பரேலி நகரை சேர்ந்தவர் முகமது முஜீப் சைபி (வயது 19). ராஜஸ்தானின் கோட்டா நகரில் விடுதியில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், கோட்டா அருகே பீம்லாத் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்து இதற்காக, நண்பர்கள் 4 பேரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏறக்குறைய 70 கி.மீ தூரம் பயணித்து சென்றுள்ளனர். இதற்காக, கூகுள் மேப்பையும் பயன்படுத்தி பூண்டி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை அடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் அதிகாலை 5 மணியளவில் நீர்வீழ்ச்சியை அடைந்ததும், மகிழ்ச்சியாக குளிக்க தொடங்கினர். 2 மணிநேரத்திற்கும் மேலாக குளித்தபடி இருந்தனர். இன்று காலை 7.30 மணியளவில், சைபியின் சட்டை நீரில் அடித்து செல்லப்பட்டபோது, அதனை பிடிப்பதற்காக அவர் முயன்றுள்ளார்.
ஆனால், துரதிர்ஷ்டவசத்தில் நீரோட்டம் கடுமையாக இருந்துள்ளது. இதில், சைபி சிக்கி கொண்டார். அவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரால், நீந்தி கரையேற முடியவில்லை. இதனால், உடன் சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்ற முடியாமல் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து, மாநில பேரிடர் மீட்பு படையினர் அவரை தேடினர். எனினும், ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின்பே தண்ணீரின் ஆழத்தில் பாறைகளில் சிக்கி இருந்த அவரது உடலை மீட்க முடிந்தது. நீரில் அடித்து செல்லப்பட்ட சட்டையை எடுக்க சென்று ஜே.இ.இ. மாணவர் உயிரிழந்தது அந்த பகுதியில் வசிப்பவர்கள் இடையே பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.






