

புதுடெல்லி,
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசை பின்பற்றி, பா.ஜனதா ஆளும் மாநிலங்கள், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைத்துள்ளன.
ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைக்காதது ஏன்? பா.ஜனதா ஆளும் மாநிலங்கள், சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்கும்போது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் நிவாரணம் வழங்காதது ஏன்?
பெட்ரால், டீசல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வது தெளிவாகிவிட்டது. இவ்வளவு நாளும் மத்திய அரசை குறை சொல்லிவிட்டு, தாங்கள் வரியை குறைக்க மறுக்கின்றன.
எரிபொருள் விவகாரத்தில் மத்திய அரசு பிக்பாக்கெட்' அடிப்பதாக ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில், மதிப்பு கூட்டு வரி ரூ.32.19. ஆனால் பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் ரூ.21.86 மட்டுமே. எனவே, காங்கிரசை விட பெரிய பிக்பாக்கெட்காரர்' கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.