உர தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவாதது ஏன்? மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி


உர தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவாதது ஏன்? மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி
x
தினத்தந்தி 3 July 2025 5:30 AM IST (Updated: 3 July 2025 5:30 AM IST)
t-max-icont-min-icon

முதுகெலும்பு, வெளிநாட்டை சார்ந்து வளைந்து கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில், உர தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான ஊடக செய்திகளை சுட்டிக்காட்டி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள் ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள்தான் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. ஆனால் அந்த முதுகெலும்பு, வெளிநாட்டை சார்ந்து வளைந்து கொண்டிருக்கிறது.

இந்தியா, 80 சதவீத சிறப்பு உரங்களை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. தற்போது, அந்த உர வினியோகத்தை சீனா நிறுத்தி விட்டது.

சீனா எந்த நேரத்திலும் வினியோகத்தை நிறுத்தும் என்று தெரிந்தும் மத்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. உள்நாட்டு உர உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், அதற்கென எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

தற்போது, டி.ஏ.பி., யூரியா போன்ற அத்தியாவசிய உரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இது முதல்முறை அல்ல. அவர்களுக்கு உதவ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒருபுறம், பிரதமர் மோடி உர மூட்டையில் தனது புகைப்படத்தை அச்சிட்டுக் கொள்கிறார். மறுபுறம், விவசாயிகள் உரத்துக்கு 'மேட் இன் சீனா'வை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. தங்கள் சொந்த மண்ணிலேயே அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டுமா?

விலை மதிக்க முடியாத நேரத்தையும், நல்ல சாகுபடியையும் இழந்துவிட்டு, தற்போது விவசாயிகள் ''இது யாருக்கான வளர்ச்சி?'' என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story