'ஜோஷிமத் விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று மம்தா பானர்ஜி கூறினார்.
'ஜோஷிமத் விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி
Published on

கொல்கத்தா,

வடஇந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது.

இமயமலையையொட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக, ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களின் சுவர்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது.

இதுதவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்தது. ஜோஷிமத் நகருக்கு அருகேயுள்ள கிராமங்களில் இதேபோன்ற நிலை காணப்படுகிறது

இதனை தொடர்ந்து, ஜோஷிமத் நகரில் விரிசல் விட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இடிப்பது என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி அரசு நிர்வாகம் தனியாக குழு அமைத்து செயல்படுத்தி வருவதுடன், இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து இந்த விரிசலுக்கான காரணம் பற்றி ஆய்வும் செய்து வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ஜோஷிமத் நகரைப் போலவே மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் நிலம் பூமிக்குள் புதையும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜோஷிமத் நகரில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு முன்கூட்டியே இது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஜோஷிமத் நகரில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் அபாயகரமானது. இதற்கு எந்த வகையிலும் அங்குள்ள மக்கள் பொறுப்பாக முடியாது. பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை."

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com