நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பர்; சரத் பவார்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பர் என சரத் பவார் உறுதியுடன் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பர்; சரத் பவார்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 23ந்தேதி மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்று கொண்டனர். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டது.

இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது, நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கவர்னர் மாளிகையில் 3 கட்சிகளின் மூத்த தலைவர்களும் சமர்ப்பித்துள்ளனர். சிவசேனா 63, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 51 என மொத்தம் 162 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் ஆதரவு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமாஜ்வாதி கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தங்களுக்கு போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று இந்த எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு நடத்துகின்றனர்.

இதற்காக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 162 உறுப்பினர்களும் ஓரணியில் நின்று உறுதிமொழி ஒன்றை எடுத்து கொண்டனர்.

இதன்படி அவர்கள், சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி தலைமையின் கீழ், என்னுடைய கட்சிக்கு நான் நேர்மையாக இருப்பேன். யாராலும் இழுக்கப்படமாட்டேன். பா.ஜ.க. பலன் அடையும் எதனையும் நான் செய்யமாட்டேன் என உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதுபற்றி 162 எம்.எல்.ஏ.க்களின் கூட்டு கூட்டத்தின் முன் சரத் பவார் பேசும்பொழுது, நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் அஜித் பவார், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் (தேசியவாத காங்கிரஸ் கட்சி) கொறடா ஒருவரை நியமித்திடுவார் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது.

அந்த கொறடாவுக்கு எதிராக செயல்படுவோர் அவை உறுப்பினர் என்ற அந்தஸ்தினை இழந்து விடுவார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அரசு அமைய பா.ஜ.க.வுடன் கைகோர்த்ததற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அஜித் பவாருக்கு, எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா ஒருவரை நியமிக்கும் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

உங்களது (எம்.எல்.ஏ.க்கள்) உறுப்பினர் பதவி போகாது என்பதற்கு தனிப்பட்ட முறையில் நான் பொறுப்பேற்று கொள்கிறேன். சட்டவிரோத முறையில் பதவியேற்றவர்கள் நீக்கப்படுவார்கள் என பா.ஜ.க.வை வெளிப்படையாக குறிப்பிட்டு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com