

3-வது அலை
கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு எதிராக நாடு தீவிரமாக போராடும் வேளையில் 3-வது அலையானது குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் ரன்தீப் குலேரியா மறுத்தார். கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை மோசமாக தாக்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கணிக்க முடியாது...
இதையொட்டி, கோவிட்-19 பணிக்குழுவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவரும், வல்லுனருமான டாக்டர் என்.கே.அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தற்போதுள்ள கொரோனா விகாரங்களுக்கு இளைஞர்களோ, குழந்தைகளோ பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இந்திய தரவுகள் எந்தவித குறிப்பிட்ட முன்னறிவிப்பையும் காட்டவில்லை.இருந்தாலும், முழுமையான எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இளைஞர்களோ, குழந்தைகளோ பாதிக்கப்படுகிறபோது கவனத்தில் கொள்ளப்படுகிறார்கள்.இந்த நேரத்தில் 3-வது அலை பற்றி கணிக்க முடியாது.
குழந்தைகள் அதிகமாக பாதிக்க காரணம் இல்லை...
ஆனால் நமது நாட்டில் இருந்தும், உலகின் பிற பகுதிகளில் இருந்தும் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் அல்லது அடுத்த அலைகளில் (3-வது அலையில்) குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் குழந்தைகள் கொரோனா சேவைகளை மேம்படுத்த வேண்டும். மீதமுள்ள கொரோனா மேலாண்மை கட்டமைப்புடன் இணைக்க வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு குறிப்பிட்ட பராமரிப்பு வசதி தேவை. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தாய், தந்தை அல்லது அவர்களுடன் ஒரு பராமரிப்பாளர் தேவைப்படுவார்கள். மேலும், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறபோது, முன்கூட்டியே பிரசவிப்பார்கள். இது தொடர்பான சிகிச்சை முறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு குழந்தைகள் நல குழுவினரால், சங்கத்தினரால் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.