ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம்:  கிரண் ரிஜிஜு

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம்: கிரண் ரிஜிஜு

ராகுல் காந்தி மந்திரியின் பதிலுரையை கூட அவையில் அமர்ந்து கேட்காமல் ஓடி விட்டார் என கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டாக கூறினார்.
Published on

புதுடெல்லி,

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது.

இந்தியாவின் நலன்களை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள். நீங்கள் 'பாரத மாதா'வை விற்று விட்டீர்கள். பிரதமர் இதெல்லாம் பலனின்றி செய்ய மாட்டார். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது கழுத்தை நெறித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தை காணலாம் என கூறினார். நாட்டு மக்களின் வருங்காலம் சரணடைய செய்யப்பட்டு விட்டது என குற்றச்சாட்டாக கூறினார்.

Also Read
வங்காளதேசத்தில் நாளை பொது தேர்தல்; டாக்காவில் 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அறிவிப்பு

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம்:  கிரண் ரிஜிஜு

இந்நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பயனற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும், அவை நடவடிக்கைகளுக்கான தெளிவான ஒழுங்குமுறை விதிகள் மற்றும் நன்னடத்தைகள் உள்ளன.

உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டுகளை மற்றொரு உறுப்பினர் கூற விரும்பினால், அதற்காக நீங்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

அவையில் விவரங்களை சுட்டி காட்டும்படி ராகுல் காந்தியிடம் நான் கேட்டு கொண்டேன். ஆனால், அவர் இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன்களை பிரதமர் விற்று விட்டார் என கூறுகிறார். எந்த அடிப்படையில்? இதனை அவர் கூறுகிறார். எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் ஹர்தீப் சிங் பூரிக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி பேசி முடித்ததும், மந்திரியின் பதிலுரையை கவனிக்காமல் உடனடியாக அவையை விட்டு வெளியேறி சென்று விட்டார். இது மரபு இல்லை என குறிப்பிட்ட ரிஜிஜு, ராகுல் காந்தி உள்நோக்கத்துடன் தெரிந்தே பொய் கூறுகிறார். மந்திரியின் பதிலுரையை கூட அவையில் அமர்ந்து அவர் கேட்கவில்லை. ஓடி விட்டார். அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம் என ரிஜிஜு கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com