

புதுடெல்லி,
நிர்பயா என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவி, டெல்லியில் 2012-ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் கும்பல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார்.
இதில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 4 பேரும் தூக்கில் போடப்படுவதை தள்ளிப்போடுகிற வகையில் நாளும் ஒரு சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை கடந்த 1-ந்தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போட ஏற்பாடு ஆனது. அதை எதிர்த்து அவர்கள் டெல்லி பாட்டியாலா செசன்சு கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களை தூக்கில் போட தடை விதித்து அந்த கோர்ட்டு கடந்த 31-ந்தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பிலும், மாநில அரசு சார்பிலும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை கடந்த சனிக்கிழமையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வெளியாகிறது. அப்போது நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட தடை விலகுமா என்பது தெரியவரும்.