

ரேவரி,
அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் ஒரு 19 வயதுப் பெண். படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அந்தப் பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்றவர் ஆவார்.
அவர் நேற்று சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்தப் பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரை போலீசார் வாங்க மறுத்து உள்ளனர்.
தாம் பல போலீஸ் நிலையங்களுக்குச் சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க அங்கு மறுத்த பின் அவர் நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார். அவர் இந்த புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியதாவது:-
சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடிஜியிடம் விருது பெற்றவர் எனது மகள். ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். மோடி ஜி பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம் என்கிறார். ஆனால் எப்படி? என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உள்ளார்.