

தாவணகெரே,
தாவணகெரே டவுனில் கள்ளக்காதலனை சேலையால் கழுத்தை இறுக்கி குடிபோதையில் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தாவணகெரே டவுனில் நாகம்மா கேசவமூர்த்தி பகுதியில் வசித்து வருபவர், ஷபீனா (வயது 38). இவர் திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மஞ்சப்பா (40). இவரும் திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்து வருகிறார்.
இந்த நிலையில் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வரும் ஷபீனாவுடன் மஞ்சப்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவர் இடையேயும் கள்ளக்காதல் உண்டானது. இதையடுத்து ஷபீனாவும், மஞ்சாவும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இருவரும் குடிபோதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இருவரும் மது குடித்துவிட்டு குடிபோதையில் சண்டையிட்டு கொள்வார்களாம். இதனால் அக்கம்பக்கத்தினர் அவர்களை வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு செல்லும்படி கூறியும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சப்பாவும், ஷபீனாவும் மது குடித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த ஷபீனா, தனது சேலையால் மஞ்சப்பாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். நேற்று காலை தான் இந்த கொலை சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஹடதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மஞ்சப்பாவை, ஷபீனா சேலையால் கழுத்தை இறுக்கி கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஷபீனாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையான மஞ்சப்பா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலனை பெண் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.