

மும்பை
லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து தப்பிக்க தான் வாங்கிய 300 ரூபாய் லஞ்ச பணத்தை வாயில் விழுங்க முயற்சி செய்த பெண் போலீஸ் கான்ஷ்டபிள் கைது செய்யப்பட்ட சம்பவம் மேற்கு மகாராஷ்ட்ராவில் கோலாபூரின் சந்த்காத் காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.
தன்னுடைய பாஸ்போர்ட்டிற்காக நன்நடத்தை சான்றிதழ் பெற வேண்டி 28 வயதான விண்ணப்பதாரர் ஒருவர் சந்த்காத் காவல் நிலையத்தை அணுகியுள்ளர்.அங்கு திபாலி காட்கி என்னும் பெண் போலீஸ் கான்ஷ்டபிள் சான்றிதழ் வழங்க 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாய் தெரிகிறது.இதனை ஒப்புக்கொண்ட விண்ணப்பதாரர்,பின் கோலாபூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை அணுகி புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் திபாலி லஞ்ச பணத்தை பெறும் போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்ய முற்பட்டனர்.நிலைமையை சுதாரித்து கொண்ட திபாலி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் லஞ்சபணம் 300 ரூபாயை வாயில் திணித்து விழுங்க முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன லஞ்ச ஒழிப்பு துறையினர் மத்தியில்,மற்றொரு பெண் போலீஸ் கான்ஷ்டபிள் வெகுவிரைவாக செயல்பட்டு வாயைத் திறந்து பணத்தை மீட்டெடுத்துள்ளார்.இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திபாலியை கைது செய்து பாதி கிழிந்த நிலையிலுள்ள அப்பணத்தை ஆதாரத்திற்கு எடுத்துச் சென்றனர்.