ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி தலைவர் மீது செருப்பை வீசிய பெண் கவுன்சிலர்

இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ லட்சுமண ராம், கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி தலைவர் மீது செருப்பை வீசிய பெண் கவுன்சிலர்
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் நாகூர், மெர்டா நகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் நகரின் பிற வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ லட்சுமண ராம், கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை பெண் கவுன்சிலர் ஷோபா லஹோட்டி திடீர் என்று மெர்டா நகராட்சி தலைவர் கவுதம் தக் மீது செருப்பை வீசினார். மேலும் இக்கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் ஒருவரும் கவுதம் தக் மீது மாலை வீசியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு கவுன்சிலர்கள் மீதும் மெர்டா நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவுதம் தக் தெரிவித்துள்ளார். இதனால் பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டம் மீண்டும் 7 நாட்களுக்கு பிறகு நடத்தப்படும் என்று கவுதம் தக் கூறினார்.

இதுகுறித்து மெர்டா நகர காவல் நிலைய அதிகாரி பிரமோத் குமார் சர்மா கூறியதாவது,

இந்த சம்பவம் தொடர்பாக இரு கவுன்சிலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் கவுன்சிலரின் புகாரின் பேரில் தலைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com