

அகர்தலா,
திரிபுராவின் அகர்தலா நகரில் பர்பா ரங்கமதி கிராமத்தில் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் வயலில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு வந்த கிராம மக்களில் சிலர் அந்த பெண்ணை இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
அந்த பெண்ணின் முகத்தில் மையை பூசியுள்ளனர். அதன்பின் அந்த பெண்ணுக்கு காலணிகளால் ஆன மாலையை அணிவித்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த பெண்ணுக்கு எப்படி எழுதுவது என தெரியாத நிலையில் அவர் கூறிய தகவல்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். அனைத்து குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டோம் என போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.
எனினும் கிராமவாசிகள் போலீசாரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன் அந்த பெண் திருமணம் ஆன ஆண் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனை ஆணின் மனைவி கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
ஆனால் அந்த ஆண் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக அடித்து உள்ளார். இதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த ஆணின் மனைவி நேற்று உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.