விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்- ஆண் குழந்தை பிறந்தது

மஸ்கட்டில் இருந்து மும்பை வந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்- ஆண் குழந்தை பிறந்தது
Published on

மும்பை,

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்தது. விமானம் அதிகாலை 3.15 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது தாய்லாந்து நாட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக விமான பணியாளர்கள் கேபினில் கர்ப்பிணிக்கு அறை ஒன்றை தயார் செய்தனர். மேலும் விமானி மூலம் மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் விமானத்தில் பயணம் செய்த நர்சு ஒருவர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முன்வந்தார். அவர், பணிப்பெண்கள் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார்.

இதில் அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைப்பார்த்த பயணிகள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். இந்தநிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் தாய், சேய் இருவரும் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தாய், சேய்க்கு தேவையான உதவிகளை செய்ய தாய்லாந்து தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com