பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அக்கிஹெப்பலு கிராமத்தை சேர்ந்தவர் அப்தாப். இவரது மனைவி அரிபா பானு. இந்த நிலையில் அரிபா பானு கர்ப்பமானார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது 3 குழந்தைகள் வயிற்றில் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து 3 குழந்தைகளும் எந்தவித பிரச்சினை இன்றியும் பிறக்க தொடர்ந்து டாக்டர்களின் அறிவுரையை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் ஆகும். 3 குழந்தைகளும், தாயும் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற அரிபா பானுவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.