

சிக்கமகளூரு,
தாவணகெரேயில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தாவணகெரே மாவட்டம், டவுன் சேகரப்பா நகரை சேர்ந்தவர் நாகரத்னா (வயது 45). இவர் 3 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இவர்களுக்கு இடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நாகரத்னாவின் வீட்டுக்கு வந்த நாகராஜ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகரத்னாவின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகரத்னா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகரத்னாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டை விட்டு தப்பி ஓட முயன்ற நாகராஜை சுற்றி வளைத்து பிடித்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை அருகில் இருந்த தென்னை மரத்தில் கயிற்றால் கட்டிவைத்து தாக்கினர்.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் கட்டப்பட்டிருந்த நாகராஜை மீட்டனர். பின்னர், போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, நாகராஜை கைது செய்தனர்.
இதையடுத்து, போலீசார் நாகரத்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.