

பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி கலால்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்.ராகேஷ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த தமிழ்நாடு தஞ்சாவூரை சேர்ந்த சிந்துஜா(வயது 29) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு பாலக்காடு 2-ம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சுதீர் டேவிட், கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த வழக்கில் சிந்துஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த அவர் நிபந்தனைகளை மீறி மீண்டும் கஞ்சா கடத்தியதற்காக கன்னியாகுமரியில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.