

புதுடெல்லி,
பொதுவாக இந்திய பெண்கள் தலைமுடியை நீளமாக வளர்ப்பதிலும், உடல் அழகை பேணுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல பெண்கள் வேலைக்கு சென்றாலும், தலைமுடியை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். பொதுவாக, ஒருவர் 6 அடி உயரம் வரை வளர்வார்கள். ஆனால், அதையும் தாண்டி தலைமுடியை வளர்த்து இந்திய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ரேணு தரியல் என்ற அந்தப் பெண் தனது தலைமுடியை 8 அடி 10 அங்குலம் (271.50 செ.மீ.) அளவுக்கு நீளமாக வளர்த்து முதல் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு உக்ரைன் நாட்டை சேர்ந்த அலீயா நசிரோவா என்ற பெண் 8 அடி 5.3 அங்குலம் தலைமுடியை வளர்த்து உலக சாதனை புரிந்துள்ளார். அவரது சாதனையை தற்போது ரேணு தரியல் முறியடித்து இருக்கிறார்.
உலகிலேயே உயரமான மனிதரான ராபர்ட் வாட்லோவின் உயரத்தைவிட (8 அடி 11.1 அங்குலம்) ரேணு தரியலில் தலைமுடியின் நீளம் சற்றே குறைவாகும். ரேணு தரியலின் இந்த உலக சாதனை உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
யூடியூபரான ரேணு தரியல், தனது நீள தலைமுடிக்கான ரகசியத்தை மூடிமறைக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து என் தலைமுடியை வளர்த்து வருகிறேன். இந்திய கலாசாரத்தில், நீளமான முடி என்பது மிகுந்த அழகு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதுவே என்னை இவ்வளவு நீளமாக முடியை வளர்க்கத் தூண்டியது. 2015-க்குப் பிறகு நான் ஒருமுறை கூட என் தலைமுடியை வெட்டியதில்லை.
நீளமான முடியைப் பராமரிக்க மிகுந்த பொறுமை தேவை. முடியைக் கழுவுவதற்கும், சிக்கல்களை நீக்குவதற்கும் நான் பல மணிநேரத்தை செலவிடுகிறேன். எனது ரகசியம் முற்றிலும் இயற்கையானது. நான் ரசாயனப் பொருட்கள் கலந்த தயாரிப்புகளைத் தவிர்த்து வருகிறேன். மேலும், ரசாயனம் இல்லாத, வீட்டிலேயே தயாரிக்கப்படும் தலைமுடி எண்ணெய்கள் மற்றும் ஷாம்பூக்கள் குறித்த ரகசியங்களையும் எனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.