600 கணக்குகளை நீக்கிய எக்ஸ் வலைதளம் - மத்திய அரசு உத்தரவால் நடவடிக்கை

மத்திய அரசின் உத்தரவை நடைமுறைபடுத்தியது தொடர்பான அறிக்கையை எக்ஸ் வலைதள நிறுவனம் சமர்பித்தது.
600 கணக்குகளை நீக்கிய எக்ஸ் வலைதளம் - மத்திய அரசு உத்தரவால் நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். எக்ஸ் வலைதளத்தில் க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உள்ளது. இதற்கிடையே க்ரோக் ஏஐ செயலி மூலம் ஆபாசமான மற்றம் சட்டவிரோதமாக உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து எக்ஸ் வலைதள நிறுவனத்துக்கு கடந்த 2-ம் தேதி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

அதில் எக்ஸ் வலைதளத்தில் க்ரோக் ஏஐ மூலம் ஆபாசமான மற்றும் சம்மத மற்ற படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்ஸ் வலைதளத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும் சட்டத்துக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் உள்பட பிற உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும். இது தொடர்பாக 72 மணி நேரத்துக்குள் விரிவான செயல் அறிக்கை சம்பர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவை நடைமுறைபடுத்தியது தொடர்பான அறிக்கையை எக்ஸ் வலைதள நிறுவனம் சமர்பித்தது.

இந்தநிலையில் க்ரோக் ஏஐ செயலி மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச உள்ளடக்கங்கள் விவகாரத்தில் எக்ஸ் வலைதள நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது என்றும் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விவகாரத்தில் 600க்கும் மேற்பட்ட கணக்குகளை எக்ஸ்வலை தளம் முடக்கி உள்ளது. சுமார் 3,500 உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் க்ரோக் ஏஐ மூலம் ஆபாசமான அல்லது பாலியல் ரீதியான படங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் வலைதளம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com