

ஆதார் கார்டு என்பது தற்போது மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. 12 இலக்கங்களை கொண்ட ஆதார் கார்டு, அரசின் நலத்திட்டங்களைப் பெற முக்கிய ஆவணமாகும். பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது முதல் முதியோர் உதவித் தொகை பெறுவது வரை, அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண்ணே கேட்கப்படுகிறது.
இத்தகைய முக்கியமான ஆதார் கார்டில் ஒருவரின் சுயவிவரங்கள், கைரேகை பதிவு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்களை தேவையின்றி மூன்றாம் தரப்பினரிடம் பகிர வேண்டாம் என அவ்வப்போது ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஆதார் விவரங்களை நம் அனுமதியின்றி யாரும் பயன்படுத்த முடியாதபடி ‘ஆதார் லாக்’ என்ற வசதியும் உள்ளது. இந்த வசதியின் படி, உங்கள் ஆதார் எப்போது, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். உங்கள் ஆதார் லாக் செய்யப்பட்டிருக்கும்போது, பயோமெட்ரிக்ஸ் முதல் ஓடிபி வரை எந்த செயல்பாடும் வேலை செய்யாது. அதாவது, உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் ஆதாரைப் பயன்படுத்த முடியாது என்பதை இது உறுதி செய்கிறது. இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் விர்சுவல் ஐடியைப் பயன்படுத்தலாம்.
விர்சுவல் ஐடி என்பது ஆதாருடன் இணைக்கப்பட்ட தற்காலிக 16 இலக்க எண் ஆகும். ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘எனது ஆதார்’ பகுதிக்குச் சென்று, ‘ஆதார் லாக் / அன்லாக்’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் ‘UID லாக்’ என்பதைத் தேர்வு செய்து, உங்கள் ஆதார் எண், முழுப் பெயர் மற்றும் பின் கோடை பதிவிட வேண்டும். இதற்குப் பிறகு ஓடிபி மூலம் ஆதாரை லாக் செய்யலாம். தேவைப்படும் போது இதை மீண்டும் அன்லாக் செய்யவும் முடியும்.