

பெங்களூரு,
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், குறைந்த தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவால் 8 எம்.எல்.ஏக்கள் குறைவாக இருந்ததால் முதல்வராக பதவி ஏற்றும், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார் எடியூரப்பா.
அதைத்தொடர்ந்து வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தபோதிலும் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் அவர் எந்த நேரத்திலும் குமராசாமி ஆட்சியை கவிழ்ப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹசனில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசினார். அப்போது, 'மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன் என்று கூறினார். தான் 2-வது முறையாக முதல்வ ராவதை எதிர்க்கட்சிகள் கைகோர்த்து தடுத்துவிட்டதால் எதிர்பாராதவிதமாக என்னால் முதல்வராக முடியவில்லை, ஆனால் அதுவே இறுதியல்ல' என்று கூறினார்.
சித்தராமையாவின் பேச்சு கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. குமாரசாமியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூறுவதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள சித்தராமையா, நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் நினைத்துக்கொள்ளுங்கள், ஆனால், நான் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொன்னேன் என தெரிவித்துள்ளார்.