

புதுச்சேரி,
புதுச்சேரியில் இளம் பெண் டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.
புதுவை வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 68). ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி. இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் டாக்டர் யோகலட்சுமி (26). இவர், புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.டி.(நுரையீரல் மருத்துவம்) இறுதியாண்டு படித்து வந்தார்.
தேர்வுக்கு தயாராகி வந்த அவர், மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு யோகலட்சுமி அவரது தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அவரது அறைக்கு தூங்கச்சென்றார்.
இந்தநிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் யோகலட்சுமி அறையை விட்டு வெளியே வராமல் இருந்தார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அறையின் கதவை தட்டினார்கள். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் அங்கு படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் அருகே காலியான மயக்க மருந்து பாட்டில் மற்றும் சர்க்கரை நோய்க்கு போடக்கூடிய இன்சுலின் மருந்து பாட்டில்கள் 9 எண்ணம், 3 ஊசிகளும் கிடந்தன.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடலில் மயக்க மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய சோதனையில், யோகலட்சுமி அறையில் ஒரு டைரியில் அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், 'தற்கொலை முடிவை தானே (யோகலட்சுமி) எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம். இந்த முடிவுக்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும்' எனவும் எழுதியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.