இந்திய விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.95 லட்சம் மோசடி - வாலிபர் கைது

ராஜ்கோட் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்த பரத்வாஜை போலீசார் தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
இந்திய விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.95 லட்சம் மோசடி - வாலிபர் கைது
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவருக்கு கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் பரத்வாஜ் என்ற வாலிபர் அறிமுகமானார். தன்னை இந்திய விமானப்படையின் 'விங் கமாண்டர்' (Wing Commander) என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தற்போது கர்நாடகாவில் பணி செய்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்திய விமானப் படையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்றும் அந்த பெண்ணிடம் பரத்வாஜ் கூறியுள்ளார். இதன்படி பல்வேறு தவணைகளில் ரூ.1.95 லட்சத்தை பரத்வாஜுக்கு அந்த பெண் அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பரத்வாஜ், உறுதியளித்தபடி வேலை எதுவும் வாங்கித் தரவில்லை.

அதோடு பரத்வாஜ் மேலும் பணம் கேட்டதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் காவல்துறையை அணுகினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ராஜ்கோட் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த பரத்வாஜை தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பரத்வாஜ் மீது ஏற்கனவே மதுவிலக்கு தொடர்பான இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றக் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், இதே முறையைப் பயன்படுத்தி பரத்வாஜ் வேறு யாரையாவது ஏமாற்றி இருக்கிறாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com