சாவுக்கு மனைவி காரணம்.. சுவரில் எழுதி விட்டு வாலிபர் தற்கொலை: என்ன நடந்தது..?

தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் மல்லேஷ்(வயது 34). இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மல்லேஷ் சொந்தமாக தனியார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.
தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதுபோல், நேற்று முன்தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு மல்லேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பீனியா போலீசார் விரைந்து சென்று மல்லேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது படுக்கை அறை சுவரில் தனது சாவுக்கு மனைவி லட்சுமி தான் காரணம், அவர் கொடுத்த தொல்லையே காரணம் என்றும் மல்லேஷ் எழுதி இருந்தார்.
ஆனால் லட்சுமி எதற்காக தொல்லை கொடுத்தார்? என்ற மற்ற தகவல்கள் தெரியவில்லை. அதே நேரத்தில் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு மல்லேஷ் சண்டை போட்டதாக லட்சுமி கூறியுள்ளார். இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் லட்சுமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






