

புதுடெல்லி,
டெல்லியின் கோகல்புரி காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் (வயது 21). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 19-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று ஷப்னம் வீட்டில் திருமண சடங்குகள் நடைபெற்றன. மணமகள் ஷப்னம் அலங்காரத்துடன் வீட்டில் அமர்ந்திருந்தாள்.
பக்கத்து வீட்டு பெண்கள் சிலர் அவருக்கு மெகந்தி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த குலிஸ்தா (26) என்ற இளம்பெண்ணும் அங்கு வந்திருந்தார். திடீரென்று மணமகள் ஷப்னம் முகத்தில் குலிஸ்தா ஆசிட் வீசினார். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். ஆசிட் வீச்சில் பலத்த காயம் அடைந்த ஷப்னம் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கோகல் புரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குலிஸ்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், ஷப்னம் திருமணம் செய்ய இருக்கும் மணமகன் தனது முன்னாள் காதலன் என்றும், அவனை திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக ஆசிட் வீசியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.