அரசு தேர்வு எழுத சென்ற இளம்பெண் ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுப்பு - இருவர் கைது


அரசு தேர்வு எழுத சென்ற இளம்பெண் ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுப்பு - இருவர் கைது
x

போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திஸ்பூர்,

அசான் மாநிலம் திமா ஹாசோ மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ரோஷ்மிதா(வயது 26), கவுகாத்தியில் தங்கியிருந்து அரசு பொதுத்தேர்வுக்கு படித்து வந்தார். இந்நிலையில், ரெயில்வே தேர்வு எழுதுவதற்காக ரோஷ்மிதா கடந்த 4-ந்தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் அன்றைய தினம் மாலை தனது தாயிடம் மொபைல் போனில் பேசிய ரோஷ்மிதா, மீண்டும் ரெயிலில் திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் ரோஷ்மிதாவின் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். இதன் பிறகு ரோஷ்மிதாவிடம் இருந்து எந்த மொபைல் அழைப்பும் வரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இது குறித்து ரோஷ்மிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அது காணாமல் போன ரோஷ்மிதாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் ரோஷ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லியை சேர்ந்த ஹேமந்த் சர்மா மற்றும் அரியானாவை சேர்ந்த பங்கஜ் கோகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story