மங்களூருவில் போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது

மங்களூருவில் போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மங்களூருவில் போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது
Published on

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் உல்லால் அருக ஒம்பத்துகெரே பகுதியில் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக உல்லால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்த பையையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் எம்.டி.எம்.ஏ. என்னும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் உல்லால் அருகே முக்கச்சேரியை சேர்ந்த அப்துல் சவாஸ் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 25 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன், எடை எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான அப்துல் சவாசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com