

அமிர்தசரஸ்
பஞ்சாப் மாநிலம் தரன் பகுதியில், காதல் திருமணம் செய்த ஜக்ஜித் சிங் (22 வயது) என்ற இளைஞர், தனது மனைவியின் சகோதரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜக்ஜித் சிங் என்பவர், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று அந்த பெண்ணின் தாய், ஜக்ஜித் சிங்கை பேருந்து நிலையத்திற்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே காத்திருந்த பெண்ணின் சகோதரர்களான ஜஸ்பிரீத் சிங், ஹர்பிரீத் சிங் ஆகிய இருவரும், ஜக்ஜித் சிங்கை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் ஜஸ்பிரீத் சிங்கை கைது செய்தனர். மற்றொரு சகோதரர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆணவக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.