

அரித்துவார்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியா இதுவரை 1 வெள்ளிப் பதக்கமும் 2 வெண்கல பதக்கங்களும் வென்றிருந்த நிலையில், தற்போது ஆண்கள் ஆக்கி அணி ஜெர்மனியுடனான போட்டியில் 5-4 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி மேலும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றிருக்கிறது. இதன் மூலம் பதக்க எண்ணிக்கை தற்போது 4-ஆக உயர்ந்து, பதக்கப் பட்டியலில் இந்தியா 66-வது இடத்தில் இருக்கிறது.
மறுபுறம் நேற்று நடந்த போட்டியில் இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினா அணியுடனான அரையிறுதி போட்டியில் கடைசி நொடி வரையிலும் போராடி 1-2 என்று கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம், அர்ஜென்டினா தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இருப்பினும், மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அர்ஜென்டினா உடனான நேற்றைய போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி கடைசி 15 நிமிடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்திய பெண்கள் ஆக்கி அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது குறித்து இந்தியர்கள் அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,
சர்வதேச ஆக்கி போட்டிகளில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த முதல் ஆக்கி வீராங்கனை என்ற சாதனையை இந்த ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்தி, மிகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு முன்பு சில நபர்கள் அவரது சாதியைச் சுட்டிக்காட்டி இந்திய அணியின் தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவாரை அடுத்த ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள் சென்று உள்ளனர். வீட்டில் இந்திய அணியின் தோல்வியால் வந்தனாவின் குடும்பத்தினர் அனைவரும் சோகத்திலிருந்த நேரத்தில், 2 நபர்களும் வந்தனாவின் வீட்டின் முன்பாக பட்டாசுகளை வெடித்து, கிண்டல் செய்யும் விதமாக நடனமாடி இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடி உள்ளனர்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த வந்தனாவின் குடும்பத்தினரைச் சாதியைக் சுட்டிக்காட்டி அவதூறாகவும் பேசி உள்ளனர். தொடர்ந்து, அந்த இருவரும் வந்தனாவின் குடும்பத்தினரை நோக்கி, "இந்திய பெண்கள் ஆக்கி அணியில் ஏராளமான பட்டியலின வீராங்கனைகள் இருக்கின்றனர். அதனால் தான், இந்திய அணி போட்டியில் தோற்று விட்டது" என்று கத்தி கூச்சலிட்டுச் சிரித்திருக்கின்றனர். அதைக் கேட்டு மனமுடைந்து போன வந்தனாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த ரோஷனாபாத் போலீசார் வீராங்கனை வந்தனாவின் வீட்டிற்கு முன்பு சாதியைக் குறிப்பிட்டு அவதூறாகக் கோஷமிட்ட நபர்களில் ஒருவரை கைது செய்து உள்ளனர்.