

புதுடெல்லி,
பாகிஸ்தானின் பகுதியில் கர்தார்பூர் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அங்கு காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் சித்துவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. பா.ஜனதா மற்றும் அகாலிதளம் கட்சிகள் சித்துவை கடுமையாக விமர்சித்தன. அடிக்கல் நாட்டு விழாவில் இம்ரான் கான், சித்துவை புகழ்ந்தது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் இந்த புதிய சர்ச்சையும் வெளியாகியது.
பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற சந்திப்புகளில் இருந்து சித்து விலகியிருக்க வேண்டும் எனவும் பா.ஜனதா அறிவுறுத்தியது. இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம் வெளியான சர்ச்சைக்கு சித்து பதிலளித்தார். பாகிஸ்தானில் அதிகமான அன்பு காட்டப்பட்டது. ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான போட்டோக்கள் எடுக்கப்பட்டது. அப்படி புகைப்படம் எடுத்தவர்களில் சாவ்லா அல்லது சீமாயென யாரும் எனக்கு தெரியாது,என்றார்.
தேசியப் பாதுகாப்பு சட்டம்
இந்நிலையில் சித்துவை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜனதா தலைவர் சுப்பிமணியன் சாமி பேசுகையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தேசியப் புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் அவர் எங்கெங்கு சென்றார், யார் யாரை சந்தித்தார், எங்கு யாருடன் தங்கியிருந்தார் உள்ளிட்ட விஷயங்களை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அத்துடன் தனக்கும் காலிஸ்தான் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். சித்து புகைப்பட விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.