

ஐதராபாத்,
கோவையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் உதய்ப்பூருக்கு நேற்று முன் தினம் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில், விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த பயணியான கோவையை சேர்ந்த 30 வயது தொழிலதிபர் தனது செல்போனில் விமான பணிப்பெண்களை ரகசியமாக வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண்கள் விமானம் கோவையில் இருந்து ஐதராபாத் சென்ற உடன் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, ஐதராபாத் விமான நிலையத்தில் அந்த பயணி விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.