

சென்னை,
சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்கள், மேலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் 832 சட்டசபை தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்களும், 188 காவல் பார்வையாளர்களும், 366 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொது பார்வையாளர்களும், 40 காவல் பார்வையாளர்களும் 151 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப்பார்வையாளர்களும், 4 காவல் பார்வையாளர்களும், 17 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைக்குள் (புதன்கிழமை) ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு செல்லுமாறு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
பார்வையாளர்கள் அங்கு சென்றதும், தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்கள் என யாரேனும் ஒருவரை தினமும் சந்தித்து, தேர்தல் தொடர்பான குறைகளைக் கேட்டறிவார்கள்.