

சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பதவி வகித்து வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து, "வீட்டில் சோதனை என்ற பெயரில் என்னை வருமான வரித்துறையினர் சிறைப்பிடித்துள்ளனர்" என செல்வப்பெருந்தகை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் ஹிந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு 'சோதனை என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபைத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கினர்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களது பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்! இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்”என்று பதிவிட்டுள்ளார்.