

சென்னை,
தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் 2023-ல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவை இடங்களை அதிகரித்து, அதில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 272 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய அவர் முயற்சி மேற்கொண்டார்.
ஆனால், தி.மு.க. மற்றும் காங்கிரஸின் சுயநல அரசியலால் இந்தத் திருத்தங்களை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.தி.மு.க., காங்கிரஸ் எப்போதும், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என நாட்டைப் பிரிக்கவே நினைக்கிறார்கள். ஸ்டாலின் ஒரு பொய்யர். பொய்யான தகவல்களைப் பரப்பும் உங்களை தமிழகப் பெண்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்க மட்டுமே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறார் என்பது ராகுல்காந்திக்கும் தெரியும். நான், மு.க.ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். 'உதயநிதியை ஒருபோதும் முதல்-அமைச்சராக்க மாட்டேன்' என்று ஸ்டாலினால் தமிழக மக்களிடம் அறிவிக்க முடியுமா?” என்றார்.