

சென்னை,
மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் இருந்து கவனித்து வந்தார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அவரது நிழலாக வலம் வந்த சசிகலா, நிஜ அரசியலுக்குள் நுழைந்தார்.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, அதன் பிறகு நடந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சராக அவர் பதவி ஏற்க இருந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பும் வந்தது. அதில், 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக அறிவித்து விட்டு சென்றார்.
அவர் 4 ஆண்டு சிறை வாசத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அரசியல் நிலைமை எல்லாம் மாறிப்போய் இருந்தது. அ.தி.மு.க.வில் மீண்டும் அவரால் கோலோச்ச முடியவில்லை. அதன்பிறகு, அரசியலை விட்டு ஒதுங்கிய அவர், தனது ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து பேசிவந்தார். இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறிவந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. சமீபத்தில், அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா, "தேர்தல் களத்தில் இறங்குவேன்" என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதற்கான வியூகத்தையும் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா வகுத்து வருகிறார். இந்த நிலையில் நாளை (பிப்ரவரி 24) ஜெயலலிதாவின் பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து, தென்மாவட்டத்தில் தனக்கு செல்வாக்குள்ள 25 தொகுதிகளில், ஆதரவாளர்களை களம் இறக்க சசிகலா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
நாளை தனிக்கட்சி தொடங்குவதாக கூறப்படும் நிலையில், சசிகலா சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த சசிகலா, "நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நல்ல தகவலை சொல்கிறேன்" என்று கூறினார்.