அ.தி.மு.க.வினரால் முதுகில் குத்தப்பட்டேன் - த.வெ.க.வில் இணைந்த முன்னாள் சபாநாயகர் மகன் பேட்டி

அ.தி.மு.க.வினரால் முதுகில் குத்தப்பட்டேன் - த.வெ.க.வில் இணைந்த முன்னாள் சபாநாயகர் மகன் பேட்டி

அ.தி.மு.க. முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று த.வெ.க.-வில் இணைந்தார்.
Published on

சென்னை,

சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனபால், அ.தி.மு.க.வில் தொடக்க காலம் முதலே பணியாற்றி வருகிறார். எம்.ஜி.ஆர். ஆட்சியை கைப்பற்றிய 1977 தேர்தலில் சங்ககிரி தொகுதியில் வெற்றி பெற்றவர். அடுத்தடுத்து அதே தொகுதியில் வெற்றி பெற்ற தனபால், ஜெயலலிதா அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக பதவி வகிக்கிறார். அவரது மகன் லோகேஷ் தமிழ் செல்வன். கடந்த லோக்சபா தேர்தலில், இவர் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தோல்விக்கு பிறகும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவில் லோகேஷ் செயல்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று திடீரென லோகேஷ் தமிழ்செல்வன், விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்தநிலையில் த.வெ.க.வில் நேற்று அவர் இணைந் தார். த.வெ.க.வில் இணைந்தது ஏன்..? என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கட்சிக்காக என்னுடைய தந்தை உழைத்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது கட்சியில் இருந்து ஒருவரும் வந்து பார்க்கவில்லை. அ.தி.மு.க. ஒரு நான்கைந்து பேருக்கான கட்சியாக மாறிவிட்டது. நிறைய பேர் இதேபோல மன வருத்தத் தில் இருக்கிறார்கள். என்னுடைய அப்பா த.வெ.க.வுக்கு வரமாட்டார். அவர் அ.தி.மு.க.வின் விசுவாசி. த.வெ.க.வில் இணைய அப்பாவின் சம்மதத்தைப் பெற்று தான் இணைந்துள்ளேன்.

அடித்தட்டு மக்களின் ஆதரவை அ.தி.மு.க. இழந்துவிட்டது. கட்சியின் நிலையை பார்த்து பல நிர்வாகிகள் வேதனையில் இருக்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு முதுகில் குத்தப்பட்டேன். நிறைய மனக்கசப்பு இருக்கிறது. அவற்றையெல்லாம் பேச முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com