

சென்னை,
சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர்.
தமிழ்நாட்டில் மூன்று முறை முதல்-அமைச்சராக இருந்த என்னுடைய நண்பர் ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் தான் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கும். மீண்டும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்பார் . அந்த அமைச்சரவையில் ஓபிஎஸ் நல்ல இடத்தை பெறுவார்.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளது திமுகவிற்கு பலமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கண்டிப்பாக பலமாகத்தான் அமையும். தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு வங்கி பெரிதாக இன்றும் இல்லை. ஏனென்றால் அவர் கொங்கு பகுதியை சேர்ந்தவர். அதிமுகவில் இருந்து ஒரே சமயத்தில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரும் வெளியேற்றப்பட்டனர். இவர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு தென் மாவட்டங்களில் அவர்கள் சமூகம் சார்ந்த மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இன்று அந்த எதிர்ப்பு ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு வாக்குகளாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.