திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்: பிரதமர் மோடி

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை விட 4 மடங்கு அதிக நிதி வழங்கியுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்: பிரதமர் மோடி
Published on

திருச்சி,

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

அனைவருக்கும் வணக்கம்...

மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குகிறேன். திருச்சி நகரில் உங்கள் முன் நான் இருப்பது பெருமிதமான தருணம். நெஞ்சுரம், நம்பிக்கை மிகுந்த நகரம் திருச்சி. கார்கில் போரில் தியாகம் புரிந்த மேஜர் சரவணன் திருச்சியை சேர்ந்தவர். தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம்.

தமிழகத்தின் எதிர்காலத்திற்காக பல்வேறு முதலீடுகளை செய்ய உள்ளோம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திருச்சியில் புதிய விமான நிலையம் அமைத்தோம்; மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்த உள்ளோம். இனி ஆயிரக்கணக்கான வணிகர்கள், சுற்றுலா பயணிகள் மதுரைக்கு வருவார்கள். புகழ்பெற்ற மதுரை மல்லி இனி அன்று மாலையே பாரீசுக்கும், பிரிட்டனுக்கும் கொண்டு செல்லப்படும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை விட 4 மடங்கு அதிக நிதி வழங்கியுள்ளோம். தமிழக நெடுஞ்சாலைக்கு ரூ.57 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி இங்கு அமைவது அவசியம். ஒரே குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது திமுக. தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி; ஊழல் ஆட்சி நடக்கிறது. விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போனது திமுக. வேலை வாங்கி தருவதாக திருச்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடி பணம் எல்லாம் எங்கே போகிறது?. ஒரு குடும்பத்துக்கு செல்கிறது; அந்த குடும்பத்தின் சொத்தாக மாறுகிறது. தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு காவிரிப் படுகை விவசாயிகளே முதுகெலும்பாக உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு புறக்கணித்தது. மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக திட்டங்களை திமுக அரசு தாமதப்படுத்துகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பயமில்லா வாழ்க்கையை பெண்களுக்கு உத்தரவாதப்படுத்துவோம்.

சொன்னதை செய்வதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி. என்.டி.ஏ.வால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்துக்கு உழைக்கும் அரசு இல்லாமல், மக்களுக்கு உழைக்கும் அரசு தேவை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நம்புகின்றனர். ஆடியில் காவிரி பொங்குவது போல தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.

ஈரான் - அமெரிக்கா போர் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள். மேற்கு ஆசிய போரால் மக்கள் பயப்பட வேண்டாம். சிலிண்டர் தட்டுப்பாடு நெருக்கடியில் இருந்தும் மீண்டு வருவோம்; கொரோனா நெருக்கடியை பார்த்தவர்கள் நாம். 'வரும் சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது. ஊழல் பாதையா?.. வளர்ச்சி பாதையா..?. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தே.ஜ.கூட்டணி ஆட்சியை விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com