

விருதுநகர்,
விருதுநகரில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும். இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் செய்யாத சாதனையாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி பெற்று தந்தார். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர்.
நம்முடைய வாக்குறுதிகளை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ரூ.2 ஆயிரம் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தி யில் வரவேற்பை பெற்றுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியை தி.மு.க. சரி செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளது. வரப்போகிற ஆட்சி அதிமுக ஆட்சிதான்; எடப்பாடி பழனிசாமிதான் உறுதியாக முதல்-அமைச்சர்; அதில் எந்த சந்தேகமும் கிடையாது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.