

புதுச்சேரி,
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வி.ஓ.சி அரசுப் பள்ளிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை நீலா என்ற ரோபோ வரவேற்கிறது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்ததாக எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். டோக்கன் விநியோகித்தவர்களை திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் விரட்டிப் பிடிக்க முயன்ற போது, அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
பணம், மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்களை விநியோகம் செய்ததாக கூறி போலீசாரிடம் எதிர்க்கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.