ரஜினிகாந்தின் ஆளுமையை கொச்சைப்படுத்தக்கூடாது - திருமாவளவன்

புதிதாக கட்சி தொடங்கிய சசிகலாவுக்கு என்னுடைய வாழ்த்துகள் என திருமாவளவன் கூறினார்.
ரஜினிகாந்தின் ஆளுமையை கொச்சைப்படுத்தக்கூடாது - திருமாவளவன்
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதில் தொடர்புடைய காவல் துறையினர் கைது செய்யப்பட வேண்டும். ஆகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசிக சார்பாகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆகாஷ் படுகொலையில் தொடர்புடைய காவலர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி இருக்கிறேன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என திமுக மிரட்டியதாக கூறுவது கற்பனை. ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக்கூடாது. அரசியல் அதிகாரம், ஆட்சி போன்றவற்றுக்கு மயங்கக்கூடியவர் அல்ல ரஜினிகாந்த். வெளியேறிவிட்டார் .. விலகி நிற்கிறார்… ரஜினியை ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது. அச்சுறுத்தி வெளியேற்றவும் முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார்.

எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை பேச்சுவார்த்தை முடிந்த பிறகுமுறைப்படி அறிவிக்கிறோம். புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற சசிகலா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள், அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திமுக கூட்டணியை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய கூட்டணி இன்னும் உருவாகவில்லை. அதிமுக சிதறி இருக்கிறது. மேலும் திமுகவை எதிர்க்கக்கூடிய கூட்டணி இன்னும் உருவாகவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com