

புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண் ணப்பன் பேசியதாவது:-
பிரதமர் மோடியை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எங்களை போன்றவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என்றால் அது திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும். நீங்கள் மீண்டும் முதல்-அமைச்சராக வருவீர்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொன்னேன்.
1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்புறம் அவர்களால் வர முடிந்ததா? சொன்னால் கோபித்து கொள்வார்கள். கூட்டணியில் உள்ளார்கள், ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள், நானும், செல்வப்பெருந்தகையும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள், போட்டோவுக்கு போஸ் கொடுக்க போய் நிற்கிறோம்.
எந்த கூட்டணி என்றாலும் சரிதான், மு.க.ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. கூட்டணி ஆட்சி, கூட்டணி ஆட்சி என்று செய்தி வருகிறதாம். கருணாநிதி 110 இடங்களில் வெற்றி பெற்றபோது கூட்டணி ஆட்சியா அமைத்தார். வருகின்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். இதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் கேட்கிறதை செய்து கொடுக்கின்றோம். கேட்டு பெற்று கொள்ளுங்கள்.
கன்னியாகுமரிக்கு சென்றபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை வைத்தார். அதை செய்து கொடுத்தேன். நாங்கள் எந்த கட்சி எம்.எல்.ஏ. என்றா பார்த்து செய்கின்றோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கும் கேட்டதை செய்து கொடுக்கிறோம். அதனால் வேண்டும் என்பதை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.