இன்று த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்.. திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை புறப்பட்டார் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய், இன்று தஞ்சாவூரில் நடைபெறும் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இன்று த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்.. திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை புறப்பட்டார் விஜய்
Published on

தஞ்சாவூர்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் 4,900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அவர்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். விஜய் வருகையையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெயில் காரணமாக மேற்கூரை மற்றும் அமர்வதற்கு வசதியாக நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தவெக சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வருவார்கள் என்பதால் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பை மீறி தொண்டர்கள் நிகழ்ச்சிக்கு செல்வதை தடுக்கும் வகையில் 3 அடுக்குகளாக தகர ஷீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். கூட்டம் நடைபெறும் பகுதியில் பிரசார பேருந்தின் மேல் நின்று பேசுகிறார். மேலும் அந்த இடத்துக்கு அவர் வர தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் நேரலையாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் நடைபெற உள்ள த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க தனி விமானத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் புறப்பட்டார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று தரையிறங்கிய அவர், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com