

சேலம்,
சேலத்தில் வருகிற 13-ந் தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்காக த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மகுடஞ்சாவடி காளிகவுண்டம்பாளையம் பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு உயர் போலீஸ் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது.
இதனிடையே, கடந்த 4-ந் தேதி சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள், போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியை சந்தித்து, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி அந்த மனுவை அவர் நிராகரித்தார்.
இந்த நிலையில், மீண்டும் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் உட்பட்டவர்களே கலந்து கொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.