

சென்னை,
சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் தமிழ் என்ற சொல்லே மெல்ல மெல்ல மறைத்து, திராவிடம் என்ற சொல்லை திணிப்பது நடந்து வருகிறது. இது தமிழுக்கு தி.மு.க. இழைக்கும் மிகப்பெரிய அநீதியாகும். தமிழக அரசியல் இன்று திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது. வாழ்த்துகளில் கூட மொழி வேற்றுமையை விதைத்து, தமிழர்களின் அடையாளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதைக்கிறார்.
ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்துகொண்டு, யுகாதி திருநாள் வாழ்த்து தெரிவிப்பதில் கூட மு.க.ஸ்டாலின் பிரிவினை யைத் தூண்டுவது மிகுந்த வேதனைக்குரியது. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத தி.மு.க. அவல ஆட்சியைப் பற்றி வைகோவோ, திருமாவளவனோ அல்லது கம்யூனிஸ்டுகளோ வாய் திறக்காதது ஏன்?.
20-ந்தேதி (இன்று) எங்களது தேர்தல் அறிக்கையை மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.த.வெ.க. தற்போது குழப்பத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தனித்து நின்று யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதே எதார்த்தம். அந்தவகையில், விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது. கனவு காணுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதேபோல், விஜய்யும் கனவு காண்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.