

சென்னை,
முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார். அதேபோல, தேர்தல் களத்தில் திமுகவை கடுமையாக விஜய் விமர்சித்து வரும் நிலையில், பதிலுக்கு விஜய் பற்றி மு.க.ஸ்டாலின் எந்த விமர்சனத்தையும் முன்வைக்காதது தொடர்பான கேள்விக்கும் பதிலளித்தார். மு.க. ஸ்டாலின் கூறியதாவது: ''எடப்பாடி பழனிச்சாமியை கூட நான் கடுமையாக பேசுவது இல்லை.
அவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இதனால் கேள்விகள் கேட்கும்போதோ, சில பிரச்சனைகளை சொல்லும்போதோ, அதற்கு தகுந்த பதிலை தான் சொல்லி கொண்டிருக்கிறேன். நான் கடுமையாக விமர்சனங்கள் செய்வது இல்லை. அதேபோல் விஜயை பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரைக்கும் புதிதாக யாராவது அரசியல் அல்லது அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் திமுகவை விமர்சனம் செய்வது தான் வழக்கமாக உள்ளது. இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. நானும் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் இன்று திமுக அதுபற்றி கவலைப்படுவது இல்லை ஏனென்றால் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் பலரும் திமுகவால் தான் இந்த வேலை கிடைத்தது. கருணாநிதியால் தான் கிடைத்தது. திமுக மட்டும் தான் உந்து சக்தியாக உள்ளது என்று கூறுகின்றனர். இதனால் யார் வந்தாலும் திமுகவை எதிர்த்து அல்லது திமுகவை விமர்சனம் செய்தால் தான் வளர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தவறான ஒன்று. திமுக ஒரு ஆக்க சக்தி. பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் வந்துள்ளது என்றால் திமுக ஆக்க சக்தியாக இருந்து ஆட்சி புரிந்தது தான்'' என்றார்.