

சென்னை,
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான பிரமாண்ட கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், திமுகவுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சி நாங்கள் தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூறிவருகிறார்கள்.
தேசிய கட்சியான காங்கிரசும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், வாக்கு வங்கியை பொறுத்தவரை அவர்களைவிட நாங்கள் தான் அதிகம் வைத்திருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மார்தட்டி வருகின்றனர்.
ராஜ்ய சபா சீட் வழங்கியதால் அதிருப்தி
தமிழகம் முழுவதும், கட்சி பரந்து.. விரிந்து.. வளர்ந்த நிலையில், இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஆரம்பம் முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு திமுக தலைமை ராஜ்ய சபா சீட் வழங்கியது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையை அதிருப்தி அடைய செய்தது.
கோபத்தில் வி.சி.க.வினர்
இந்த நிலையில், தற்போது 8 தொகுதிகள் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க முடியும் என்று திமுக தலைமை கூறிவிட்டதாம். அதே நேரத்தில், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கும் தகவலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு தெரிந்துவிட்டதாம். இதனால், அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
"எங்களைவிட வாக்கு வங்கியை குறைவாக வைத்துள்ள கட்சிக்கு ராஜ்ய சபா சீட், இரட்டை இலக்க தொகுதிகள் வழங்குவதை ஏற்க முடியாது. எங்களுக்கு ராஜ்ய சபா சீட்தான் தரவில்லை. சட்டமன்ற தொகுதிகளையாவது அவர்களை (தேமுதிக)விட அதிகம் தாருங்கள்" என்று திமுக தலைமையிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒற்றை தொகுதியை ஏற்கக்கூடாது
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடமும் அக்கட்சி நிர்வாகிகள், ஒற்றை இலக்க தொகுதிகள் தந்தால் ஏற்கக்கூடாது என்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.