கடல் அரிப்பால் 10வீடுகள் இடிந்தன


தினத்தந்தி 9 Dec 2022 4:56 PM GMT (Updated: 9 Dec 2022 5:01 PM GMT)

கடல் அரிப்பால் 10 வீடுகள் சேதமடைந்ததை தொடர்ந்து கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காலாப்பட்டு

கடல் அரிப்பால் 10 வீடுகள் சேதமடைந்ததை தொடர்ந்து கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வீடுகள் இடிந்தன

மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் புதுவை பிள்ளைசாவடி பகுதியில் கடல் அரிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பகுதிகளில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் வீடுகளை இழந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புயல் மழையின் போது கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் இன்றும் வீடுகள் இடிந்து விழுந்ததையடுத்து பிள்ளைச்சாவடி கிராம பொதுமக்கள்இன்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கடல் அரிப்பு ஏற்படும் பகுதியில் விரைவில் கடலில் கல்கொட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் ஆய்வு செய்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி தமிழக பகுதிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டார். அவரிடம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story