நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை


நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை
x

மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று, புதுவையில் நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி

மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று, புதுவையில் நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நர்சிங் படிப்பு

புதுவையில் உள்ள நர்சிங் கல்லூரிகளில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு டெல்லி நர்சிங் கவுன்சிலிங் விதிமுறைகளின்படி நர்சிங் கல்லூரிகளில் (பி.எஸ்சி. நர்சிங்) அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தேர்வு நடத்தி (நீட் தேர்வு போன்று) அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

விரைவில் அறிவிப்பு

இருந்தபோதிலும் நர்சிங் கவுன்சிலின் புதிய விதிமுறைகளின்படி தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள் அரசு சார்பில் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லட்சிய கனவு

நர்சிங் கவுன்சிலின் புதிய விதிமுறைகளின்படி புதுவையில் உள்ள மதர் தெரசா அரசு நர்சிங் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் சேர சுகாதாரத்துறையால் நடத்தப்பட உள்ள தேர்வினை எழுதி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் விண்ணப்பித்து நர்சிங் படிப்பிற்கான இடங்களை கலந்தாய்வின் மூலம் பெறும் நிலை உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விதிமுறைகளை சுகாதாரத்துறை விரைவில் வெளியிட உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிவடைந்த ஏழை மாணவர்களின் லட்சிய கனவான நர்சிங் படிப்பு கானல் நீராகி விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story