பாண்டி மெரினாவில் கடலோர காவல் போலீசார் தீவிர கண்காணிப்பு


பாண்டி மெரினாவில் கடலோர காவல் போலீசார் தீவிர கண்காணிப்பு
x

சுற்றுலா படகுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாண்டி மெரினாவில் கடலோர காவல் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

சுற்றுலா படகுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாண்டி மெரினாவில் கடலோர காவல் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் எச்சரிக்கை

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை சிலர் உரிய அனுமதியின்றி படகுகளில் ஏற்றி கடலுக்குள் அழைத்துச்சென்று வருகின்றனர். அவ்வாறு ஏற்றி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்கப்படுவதில்லை.

இது தொடர்பாக பலமுறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சில படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். இருந்தபோதிலும் உரிய அனுமதியின்றி படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

பாண்டி மெரினா கடற்கரையில் இதற்காக 10-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு படகு சவாரி சென்ற 2 பேர் கடலில் தவறி விழுந்து காயம் அடைந்தனர். இதையடுத்து தனியார் படகு சவாரிக்கு கடலோர காவல் போலீஸ் தடை விதித்தது.

தீவிர கண்காணிப்பு

இதையடுத்து படகுகளில் சுற்றுலா பயணிகளை கடலுக்குள் ஏற்றி செல்வது நிறுத்தப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்டு வந்த நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. இந்த நிலையில் கடலோர காவல் போலீசார் இன்று பாண்டி மெரினா கடற்கரையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி படகுகளில் சுற்றுலா பயணிகள் ஏற்றிச்செல்லப்படுகிறார்களா? என்று கண்காணித்தனர். ஆனால் படகுகள் எதுவும் இயக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.


Next Story